தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 80-வது சுதந்திர தின விழா இன்று (15.08.2026) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில், மாவட்டத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய சுமார் 266 பேருக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார். மேலும், 25 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.37.75 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கிராமிய நடனம், ஜான்சிராணி பாடல், அப்துல்கலாம் பாடல், பம்பை இசை, மல்லர் கம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்விளக்கமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

