தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை–2026 கால அட்டவணையின்படி, இரண்டாம் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்யும் பணி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, தங்களுக்கு கிடைத்த இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு (Upward Movement) விருப்பம் தெரிவித்த 10,648 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதில், அரசு பள்ளிகளில் பயின்ற 6,914 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், 2,647 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வெளியிடுவதற்கு முன்பாக, கடந்த 06.08.2026 அன்று 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மாணாக்கர்களின் தரவரிசை மற்றும் விருப்பப் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கீடுகள் சரியாக வழங்கப்பட்டுள்ளனவா என்பது நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது.
ஆகஸ்ட் 13-க்குள் சேர்க்கை பெற வேண்டும்
தற்காலிக (Tentative) ஒதுக்கீட்டாணை பெற்ற மாணாக்கர்கள், தங்களது விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வசதி மையமான TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி (Provisional) ஒதுக்கீட்டாணை பெற்ற மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிக்கும் நேரில் சென்று, 09.08.2026 முதல் 13.08.2026 வரை அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
13.08.2026-க்குள் TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மாணாக்கர்களுக்கும், ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேராத மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்ட இடங்கள் தானாகவே (Default) ரத்து செய்யப்படும். அந்த இடங்கள், அதே இரண்டாம் சுற்றில் மேல்நோக்கிய நகர்வுக்காகக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்படும்.
28,979 மாணாக்கர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு
இதுவரை நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வு மற்றும் முதல் சுற்றுக் கலந்தாய்வில், 28,979 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு, அவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.
B.Arch. கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 622 மாணாக்கர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 40 மாணாக்கர்களுக்கும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு, சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணாக்கர்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் www.tneaonline.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் 3 முதல் துணைக் கலந்தாய்வு
B.E., B.Tech. மற்றும் B.Arch. துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள், +2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணாக்கர்களிடமிருந்து 17.08.2026 முதல் 31.08.2026 வரை பெறப்படும்.
துணைக் கலந்தாய்வு 03.09.2026 முதல் 07.09.2026 வரை நடைபெறும்.
மாணாக்கர்கள் தங்களது விருப்பப் பட்டியலில் தங்களுக்கு விருப்பமான எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனை திறம்படக் கையாளும் வகையில், மேம்பட்ட திறன் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புடன் கூடிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவி மையம்
ஒதுக்கீடு தொடர்பான புகார்கள் இருப்பின் Indote@tndote.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு தொடர்பான விளக்கங்கள் தேவைப்படும் மாணாக்கர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களைத் தொடர்புகொண்டு அல்லது நேரில் சென்று தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். சேவை மையங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், மாணாக்கர்களின் கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீட்டாணை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 10 இணைப்புகளுடன் செயல்படும் இந்த அழைப்பு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0110 ஆகும்.
மாணாக்கர்கள் theacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தங்களது சந்தேகங்களைத் தெரிவித்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

