அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்ட அரசு ஆணையின்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சம்பள உயர்வுடன் சேர்த்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், கடத்தூர் மற்றும் ஏரியூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இதுவரை சம்பள உயர்வு நிலுவைத் தொகையை விடுவிக்காமல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நல்லம்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் பணியாற்றும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் சம்பள உயர்வு நிதியை விடுவித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அந்தத் தொகையை இதுவரை பணியாளர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அரசு ஆணையை முழுமையாக அமல்படுத்தி, தருமபுரி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் அனைத்து பள்ளி தூய்மை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ஜே.பிரதாபன் மாவட்ட தலைவர் எம்.சுப்பு ,மாவட்ட செயலாளர் கே.ரவிச்சந்திரன் ,பொருளாளர் எல்லம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.

