12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில் நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட கைத்தறித் துறை மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம், வரும் ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை, எஸ்.ஏ.5, இலளிகம் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகம், இலளிகம் பகுதியில் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமில் இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை உள்ளிட்ட பொது மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன், பொதுச் சுகாதாரம், மகளிர் சுகாதாரம், வருமுன் காப்பு நடவடிக்கைகள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும். மருத்துவ முகாமில் பங்கேற்கும் நெசவாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
எனவே, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் கைத்தறி நெசவாளர்கள், நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

