நீட் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களின் உரிமைக்காக திமுக உறுதியாக போராடும் : கனிமொழி கருணாநிதி உறுதி
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டக் களம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “திமுக சார்பாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், இந்தப் போராட்டத்தில் உங்களுடன் நிற்கிறோம் என்பதைத் தெரிவிக்கவே இன்று இங்கு வந்துள்ளோம். நாட்டின் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் நடைபெறும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திமுக என்றும் உங்களுக்குத் துணை நிற்கும்
நீட் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே எங்கள் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரும், இப்போது தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் நீட்டுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இந்த நாட்டின் பின்தங்கிய மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானவை என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தத் தேர்வுகள் மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவையும், உரிமையையும் தடுக்கின்றன.

இந்த சமூகத்தைக் காப்பாற்றவும், மக்களுக்கு சேவை செய்யவும் மருத்துவராக வேண்டும் என்ற கனவும், இலட்சியமும் கொண்ட ஏராளமான மாணவர்கள் உள்ளனர். ஆனால், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் பெரும் தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் மாறியுள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்தத் தேர்வுகள் பெரும் சுமையாக உள்ளன. அதே நேரத்தில், நகர்ப்புறங்களிலும் வசதியான பின்னணியிலும் உள்ள மாணவர்களுக்கே இந்தத் தேர்வுகளுக்குத் தேவையான பயிற்சிகளையும் வாய்ப்புகளையும் எளிதாகப் பெற முடிகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து சட்டப்போராத்தை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாஜக அரசுக்கு பிடிக்காத பல்வேறு சட்டங்களைப் போலவே, இந்தச் சட்டத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருந்தார். தற்போது, குடியரசுத் தலைவரிடமும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காத நிலை தொடர்கிறது.
இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்று எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பாக, இந்த நாட்டின் மாணவர்களுக்கு எங்களது ஆதரவைத் தெரிவிக்க வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
தங்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், ஒன்றுபட்டு நின்று இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு திரண்டுள்ளனர். நான் இங்கு வரும்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களை நேரில் பார்த்தேன். அவர்களில் சிலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்; உங்கள் போராட்டத்திற்கு எங்களது முழு ஆதரவும் உண்டு என்ற உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நாட்டின் இளைஞர்கள் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அரசை விமர்சிப்பவர்களையும், அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவர்களையும் தேசவிரோதிகள், நக்சலைட்டுகள், நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவது வழக்கமாகிவிட்டது.
ஆனால், இந்த நாட்டின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுபவர்கள் என்ற பெருமையுடன், அவர்கள் சூட்டும் எந்தப் பெயரையும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
இன்று அவர்கள் எங்களை எந்தப் பெயரிட்டு அழைக்க விரும்புகிறார்களோ, அந்தப் பெயர்களைச் சுமந்துகொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும் மாணவர்களும் இங்கு ஒன்றுகூடியுள்ளனர். இந்த நாட்டின் இளைஞர்கள் அநீதிக்கு எதிராக எப்படி ஒன்றுபட்டு நிற்க முடியும், தங்களது உரிமைகளுக்காக எவ்வாறு குரல் கொடுக்க முடியும் என்பதை இந்தப் போராட்டத்தின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
நாங்கள் இங்கு நடைபெற்ற வன்முறையைக் கண்டோம். அத்தகைய சூழலுக்குப் பிறகும் நீங்கள் பின்வாங்கவில்லை; அச்சப்படவில்லை. எந்த அச்சுறுத்தலாலும் உங்களைப் போராட்டக் களத்திலிருந்து விரட்ட முடியவில்லை.
நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். எங்கள் கட்சியான திமுக உங்களுடன் துணை நிற்கும். எங்கள் தலைவர் உங்களுக்காகக் குரல் கொடுப்பார். இங்கு வந்துள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உங்களுடன் நிற்பார்கள். அநீதிக்கு எதிராகவும், உங்கள் உரிமைகளுக்காகவும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நாங்கள் தொடர்ந்து உங்களுக்குத் துணை நிற்போம்.
நீட் தேர்வு முழுமையாக ஒழிக்கப்படும் வரை, இந்த நாட்டின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்கள் அனைவருக்கும் சமமான, நீதியான எதிர்காலம் கிடைக்கும் வரை, இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்.
நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றிய, திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுகவாகிய நாங்கள், மாணவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வை ஒழிக்கும் வரை எங்கள் குரல் ஓயாது என்று தெரிவித்தார்.

