தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (22.07.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், தலைமையில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு வழங்கும் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
இம்முகாமில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோன்று, தருமபுரி மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன.
பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து 87 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டது. மேலும், இன்று நடைபெற்ற முகாமில் புதிதாக 65 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

