தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி மாவட்டப் பேரவைக் கூட்டம், தருமபுரி மருந்து வணிகர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு. முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கோ. கோபிநாத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி. பிரின்ஸ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்டச் செயலாளர் வெ. தர்மன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் கே. வினோத் குமார் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச.இளங்குமரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கண்ணன், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநர்கள் விமல் ரவிக்குமார், வேடியப்பன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி. நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட நிர்வாகிகள் பெ. கிருஷ்ணமூர்த்தி, இ. பாலகுமாரன், எம். இராஜசேகரன், சந்தோஷ் குமார், மார்கரெட், சக்கரைவேல் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ந.திருவேரங்கன் நிறைவுறையாற்றினார்.
இதனை தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மு.முகமது இலியாஸ் மாவட்ட செயலாளராக வெ.தர்மன் பொருளாளராக கே.வினோத்குமார் மாநில செயற்குழு உறுப்பினராக பிரின்ஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள், பதிவுரு எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கருணை அடிப்படையிலான பணி நியமன ஒதுக்கீட்டை 25 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்த அரசாணையை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மேலும், காலஞ்சென்ற அனைத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தின் மக்கள் தொகை மற்றும் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, இண்டூர், தீர்த்தமலை, மாரண்டஅள்ளி, பெரியாம்பட்டி ஆகிய இடங்களில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களையும், 128 புதிய கிராம ஊராட்சிகளையும் உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்–2-ஐ விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், அத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த தனி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வளர்ச்சித் துறையில் பணிமேற்பார்வையாளர் நிலையில் 7 ஆண்டுகள் பணியாற்றிய அனைவருக்கும் இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தில் விடுபட்டுள்ள 8 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 ஆண்டுகள் கிராம ஊராட்சிச் செயலராக பணியாற்றிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி, இளநிலை உதவியாளர்களாகத் துறையில் நியமிக்க வேண்டும் என்றும், விபி–ஜி ராம் ஜி திட்டத்திற்குத் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்கி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

