குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தருமபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கி. வெங்கட்டேசன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மா. முரளிதரன் வரவேற்றார். மாநிலப் பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் கூட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி. பிரபு செயலாளர் அறிக்கையை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் மா. முருகன் வரவு-செலவுக் கணக்கை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் ரா. கல்பனா வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கு. சின்னராசு, தருமபுரி கோட்டத் தலைவர் ரா. துரை, அரூர் கோட்டத் தலைவர் இரா. சக்திவேல் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநிலத் தலைவர் வெ. ராஜா நிறைவுரையாற்றினார். முன்னதாக சங்கக் கொடி ஏற்றப்பட்டது.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக சி. பிரபு, மாவட்டச் செயலாளராக மா. முருகன், மாவட்டப் பொருளாளராக மா. முரளிதரன், மாவட்ட துணைத் தலைவராக கு. சின்னராசு, மாவட்ட இணைச் செயலாளராக அ. செந்தில், தருமபுரி கோட்டத் தலைவராக ரா. துரை, தருமபுரி கோட்ட துணைத் தலைவராக சிவசங்கர், தருமபுரி கோட்டச் செயலாளராக ந. உலகநாதன், தருமபுரி கோட்டப் பொருளாளராக நா. உமாபதி, அரூர் கோட்டத் தலைவராக இரா. சக்திவேல், அரூர் கோட்ட துணைத் தலைவராக மு. ராகவேந்திர பிரபு, அரூர் கோட்டச் செயலாளராக க. சீனிவாசன், அரூர் கோட்டப் பொருளாளராக மு. ராஜா அபிஷேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு பட்டா மாறுதல் விண்ணப்பம் தொடர்பாக பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை நில அளவை உதவி இயக்குநர் வழங்க வேண்டும். அனைத்து வட்டங்களுக்கும் டி.ஜி.பி.எஸ். (DGPS) நில அளவீட்டு கருவிகள் வழங்கப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற குரு வட்ட அலுவலர்களுக்கு கடந்த 6 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘தமிழ் நிலம்’ இணையதளத்தை நவீனப்படுத்தி மேம்படுத்த வேண்டும். குரு வட்ட அலுவலர்களுக்கு அரசு குடியிருப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். தருமபுரி நகரில் நகர சர்வேயர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். துறை ஊழியர்களுக்கான பயணப்படி உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், ‘ஆ’ பதிவேடு மற்றும் சிட்டாவைப் பார்வையிடும் வசதியை கூடுதல் நில அளவையர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக அரூர் கோட்டப் பொருளாளர் மு. ராஜா அபிஷேக் நன்றி கூறினார்.

