நீட் தேர்வைக் கட்டமைத்த
கல்வித் திட்டத்தை
நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து
தேர்வு என்பதே
மாணவர்மீது நிகழ்த்தப்படும்
மனக்கொலை
அதிலும் நீட் என்பது
கல்வியின் பேரால் நிகழும்
ஒரு கட்டாயக் குற்றம்
22லட்சம் மாணவர்களின்
இதய ரோஜாக்கள்
எரிக்கப்பட்டிருக்கின்றன
இந்த நீட் தேர்வு
வெற்றியை அல்ல
வியாபாரத்தை நோக்கியே
கட்டமைக்கப்பட்டது
இந்தித் திணிப்பு
எதிர்ப்பில் போலவே
நீட் தேர்விலும்
எண்ணிலடங்கா உயிர்கள்
இழக்கப்பட்டுள்ளன
இந்தித் திணிப்புக்கு
ஒரு நீதி?
நீட் திணிப்புக்கு
ஒரு நீதியா?
நீட் தேர்வு
வெற்றியா தோல்வியா என்ற
எதார்த்தத்தை விரும்பவில்லை;
வாழ்வா சாவா என்ற
பதற்றத்தையே விரும்புகிறது
லட்சக்கணக்கான குடும்பங்களை
இந்த நீட் தேர்வு
சாவுக்குப் பக்கத்தில்
அழைத்துச் சென்று
அடுத்த சாவுக்குத் தயாரிக்கிறது
நீட் தேர்வைக் கட்டமைத்த
கல்வித் திட்டத்தை
நான் எதிர்க்கிறேன்
அதை மாநிலங்களின்
விருப்பு வெறுப்புக்கே
விட்டுவிட விழைகிறேன்
வெடித்த தென்னம்பாளையில்
தடித்த இடி விழுந்தமாதிரி
எங்கள் கொழுந்துகள் மீது
இந்தக் கொடுமை
நிகழாதிருக்கட்டும்
தேசம் திரண்டு
தீவைக்க வேண்டும்
நீதியில்லாத நீட்டுக்கு என தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

