தருமபுரி தபால் வாக்கு 8 காலை மணிக்கும் 8:30 க்குவாக்குபதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 04.05.2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு தருமபுரி வட்டம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்காக, தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு மேசையிலும் சி.சி.டிவி. கண்காணிப்பு கேமரா பொருத்துப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணிகை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு, அவர்கள் எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டிய மேசை சமவாய்ப்பு முறையில் காலை 07.00 மணிக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
தபால் வாக்கு எண்ணிக்கை காலை 08.00 மணிக்கு துவங்கும், 30 நிமிடங்களுக்கு பின்னர் 08.30 மணிக்கு வாக்குபதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை துவங்கும். 08.00 மணிக்கு முன்னர் பெறப்படும் அஞ்சல் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தபால் வாக்குகள் எண்ணுவதற்கு, பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 6 மேசைகளும், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 7 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேசைக்கு 500 தபால் வாக்குகள் ஒரு சுற்றில் வழங்கப்பட்டு எண்ணப்படும். ஒவ்வொரு மேசைக்கும் ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியார்கள், ஒரு நுண்பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு தபால் வாக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக பிரிக்கப்பட்டு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களுடைய முகவர்கள் ஆகியோர்கள் ரகசிய காப்பு உறுதி மொழி ஏற்று வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்வார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் ஒரு பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது. இப்பார்வையாளர்கள் முன்னிலையில், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு வழங்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடித்து இறுதி செய்த பின்னர் அடுத்த சுற்றுக்கான இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு வழங்கப்படும்.
அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடித்த பின்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களின் இறுதி சுற்றின் முந்தைய சுற்று எண்ணிக்கை துவங்கும். மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு, ஒரு மேசைக்கு ஒரு முகவர் என்ற வீதத்தில் முகவர்களை நியமித்துக் கொள்ளலாம். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு ஒரு முகவரையும் நியமித்துக் கொள்ளலாம்.
வாக்கு எண்ணும் தினத்தன்று (04.05.2026) அனைத்து முகவர்களும் காலை 7.00 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும். முகவர்கள் ஒரு பேனா மற்றும் புள்ளி விபரங்களை குறித்துக் கொள்ள தேவையான வெள்ளைக் காகிதங்கள், சிறிய நோட்டு ஆகியவை மட்டுமே எடுத்து வர வேண்டும். இதைத் தவிர வேறு பொருட்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது. கண்டிப்பாக செல்போன் மற்றும் கூர்மையான பொருட்கள் ஏதும் எடுத்து வர அனுமதியில்லை.
காவல்துறையின் சோதனை முடிக்கப்பட்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் கூடத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட மேசையின் முன் ஆஜராக வேண்டும். ஒதுக்கப்பட்ட மேசையை விட்டு அருகில் உள்ள மேசைக்கு செல்லக் கூடாது. இந்திய தேர்தல் ஆணையம், முகவர்கள் உணவு பொருட்கள், குடிநீர் ஆகியவை ஏதும் எடுத்து வரவும் அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளது. முகவர்களுக்கான காலை சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும்.
வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள Control Room மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்கு எண்ணும் கூடத்தில் அனைத்து முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உடன் இருக்கும் இதர முகவர்களுடன் தேவையற்றவைகளை பேசக் கூடாது. முகவர்கள் எவரேனும் விதிமுறைகளை மீறி நடந்தால் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்படி புதிய நடைமுறையாக, வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், முகவர்கள் ஆகியோர்களுக்கு க்யூ.ஆர் குறியீடு பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும். இந்த அடையாள அட்டை உள்ள நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், ஊடகத்துறையினர், 4 அல்லது 5 நபர்களாக ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அறைக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரால் அழைத்து செல்லப்படுவார்கள். கேமரா மட்டுமே பயன்படுத்தி வாக்கு இரகசியம் வெளிப்படாத வகையில், குறிப்பிட்ட எல்லைப்பகுதியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடவடிக்கையை பதிவு செய்யலாம். மொபைல் போன்கள் கட்டாயம் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை மையத்தில், அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை தூய்மை பணிகள் மேற்கொள்ள பொருப்பு அலுவலர்கள் நியமனம் செய்யபட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்களும், முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணி சிறந்த முறையில் நடத்த தேவையான ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளார்கள்.

