தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர் நியமனம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் தபால் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணிக்கைகான பணி சம வாய்ப்பு (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்வதை பொது பார்வையாளர்கள் டாக்டர் ஹீரா லால், வந்தனா வைத்யா, மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய தேர்தல் பார்வையாளர்கள் சுஷில் குமார் இணைச் செயலாளர் (பீகார் அரசு), தரோ மைஸ் இணைச் செயலாளர் (அருணாச்சலப் பிரதேச அரசு) ஆகியோர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தலைமையில் நடைப்பெற்றது.

23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தபால் வாக்குகள் எண்ணும் பணியானது 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர் மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பானது முதற்கட்டமாக (30.04.2026) அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணிக்கைகான பணி சம வாய்ப்பு (Randomization)முறையில் ஒதுக்கீடு செய்வது மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைப்பெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், வாக்கு எண்ணும் அலுவலர்கள் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணிபுரியவும் மாவட்ட தேர்தல் அலுவலரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு நடைப்பெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.கவிதா, மத்திய / மாநில அரசு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பாலசுந்தரம், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

