தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்டத்தில் 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 33.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 421 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பொது நூலகத்துறை ஆகிய துறைகளின் மூலம் 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் மூலம் 33.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 421 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம் இந்த தருமபுரி மாவட்டம். மகளிர் சுய உதவி குழுக்களை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள பயனாளிகளின் முகத்தில் சிரிப்பும், மகிழ்ச்சியும் தெரிகிறது. 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு இதுவே சாட்சி. இந்த மகிழ்ச்சி இன்னும் தொடர வேண்டும் நீடிக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் உழைத்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமில்லாமல் வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2021-ம் ஆண்டு ஆட்சி அமைத்தவுடன் நமது முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயண திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்தச் திட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 920 பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 22 கோடி பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள். பள்ளிக்கூட குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பயன்பெற்று வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்படுகிறார்கள். அதேபோல் அரசு பள்ளிகளின் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்து வருகிறார். 13. லட்சம் பேர் பயன்படுகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி ஊக்கத் தொகையாக மாதம் 1000 பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பத்து லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தருமபுரி மாவட்டத்தில் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்து 17 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும் சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் நமது முதல்-அமைச்சர் தற்போது 3 மாத மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம், கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு வழங்கியுள்ளார். இன்னொரு வாக்குறுதி அளித்துள்ளார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ. 2000 ஆக உயர்த்தபடும் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். சென்ற வாரம் கனவு மெய்ப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். மூலம் கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, விவசாயம் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வம் என்றும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். பள்ளி இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி எல்லா வகையிலும் நம்முடைய அரசு உங்களுக்கு துணை நிற்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுமார் 52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அரூர் 4 வழி சாலை பணிகள் 65 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் இணை உற்பத்தி பணி, 85 கோடி மதிப்பீட்டில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் இணை உற்பத்தி நிலையம், பெட்டாகரத்தில் முதல் அமைச்சர் மினி ஸ்டேடியம் கட்டும் பணி, நல்லம்பள்ளி தாலுகாவில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 12 கோடி மதிப்பில் சமூக நீதி கல்லூரி மாணவிகள் விடுதிகள் கட்டும் பணி உள்பட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வளர்ந்து வரும் மாநிலங்களில் நம்பர் ஒன் இடத்தில் 11.19 சதவீத வளர்ச்சியோடு இடம் பிடித்துள்ளது. இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இவ்வளவு நலத்திட்டங்களை கொடுத்து இருக்கும் திராவிட மாடல் 2.0 முதல் அமைச்சர் இன்னும் பல்வேறு திட்டங்களை உங்களுக்கு செய்து கொடுப்பார். மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இப்போது தமிழ்நாடு முழுக்க 4 லட்சம் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன. அத்தனை குழுக்களுக்கும் தாய்மொழி என்று சொன்னால் அது இந்த தர்மபுரி மாவட்டம் தான். 1989 ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக நம்முடைய கலைஞர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில்தான் மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த குழுக்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவிட்டு குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் மூணாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் நமது முதலமைச்சர் உங்களுக்கு கொடுக்கின்ற கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்கள் உழைப்பின் வைத்திருக்கிற நம்பிக்கையாக பார்க்கிறார். அந்த அளவிற்கு குழு சகோதரிகள் தொடர்ந்து சாதித்து வருகிறீர்கள். மகளிர் சுய உதவி குழுவினர் 25 கிலோ எடை கொண்ட உற்பத்தி பொருட்களை அரசு பஸ்களில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் எடுத்துச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 46 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கி உள்ளோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் உங்களுடைய வளர்ச்சிக்காக மேலும் அதிகமாக உழைக்க தயாராகி வருகிறோம்.
இவ்வாறு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மசெல்வன், தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, திமுக தருமபுரி கிழக்கு நகர செயலாளர் நாட்டான் மாது, மேற்கு நகர செயலாளர் கெளதம், தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் செயலாளர்கள் கிழக்கு ஏ. எஸ். சண்முகம், மேற்கு பெரியண்ணன், வடக்கு வைகுந்தம், தெற்கு மல்லமுத்து, மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், கம்பை நல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், பாப்பிரெட்டிபட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், அரூர் நகர செயலாளர் முல்லை ரவி ,அரூர் பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யா தனப்பால்,அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வேடம்மாள் , உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா நன்றி கூறினார்.

