பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 3 வார்டு சின்னஏரி பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் மற்றும் சாலை வசதி வேண்டி பல்வேறு முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பெரும் சிரமம் அடைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி திடீரென 3 ஆவது வார்டுக்கு உட்பட்ட கிராமமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பாப்பாரப்பட்டி பாலக்கோடு சாலையில் தமிழக வெற்றி கழக கட்சியினருடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாரப்பட்டி போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது முறையான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பாப்பாரப்பட்டி பாலக்கோடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

