அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல் போராட்டம்.
9 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது.மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் “சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை” உடனே இயற்ற வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதம் பங்களிப்பை இரத்து செய்ய வேண்டும். 2003ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும். டேப்ஸ் திட்டத்தில் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதம் என குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25 சதம் ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும்,வெளி முகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சி.துரைவேல் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு கிராமா நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அகிலன் அமிர்தராஜ், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் சி.பிரபு,மாவட்ட துணைத் தலைவர் சின்னராசு, ராமாநிர்வாக முன்னேற்ற உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ரங்கன் , வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் வெ. துப்பாக்கி, த.ராஜா,கூட்டமைப்பின் பொருளாளர் பகவதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் முருகன் வாழ்த்தி பேசினார். மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

