ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
18- ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இருபத்தைந்து ஊராட்சிகளுக்கு மேற்பட்ட ஊராட்சிகளைக் கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் நிரந்தர ஊழியர் கட்டமைப்புடன் ஏற்படுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், மொரப்பூர், கடத்தூர் மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் விடுபட்டுள்ள தலா இரண்டு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டமான கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டத்திற்கு வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களையும், உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கவேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ச.இளங்குமரன் , மாவட்ட செயலாளர் வெ. தர்மன், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநான் மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, மாவட்ட துணைத்தலைவர் பா. சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வாழ்த்தி பேசினார்.

