தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை
தருமபுரி பழைய பேருந்துநிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க வேண்டுமென மதிமுக தருமபுரி மாவட்ட செயலாளர் கோ.இராமதாஸ் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நேரில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு வருவதால் தருமபுரி – பென்னாகரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் துவக்க விழா நடைபெற்றது
அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,மத்தூர்,போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனர். மேலும் நகராட்சிக்கும் மிகுந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் அமைப்புகள்,வணிகர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பிலும் பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.மேலும் நான்கு ரோடு பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையும் கருத்தில் கொண்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக மேற்கண்ட பகுதிகளிலிருந்து பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்தும் தேவைப்பட்டால் இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் ஏற்படுத்தி அதற்கு ஏற்றவாறு கடைகளை கட்டி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
அரசின் தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தி அரசின் முழு கட்டுப்பாட்டில் பேருந்து நிலையத்தை வைத்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் சி.கிருபானந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் மொ.குமரவேல், தருமபுரி நகர செயலாளர் செ.பட்டு சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் காந்தி,சரவணன்,சிவராமன்,மாணவரணி சங்கர், மகளிரணி சுதா சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

