தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்
தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது தருமபுரி மாவட்ட கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்தெரிவித்துள்ளதாவது
தருமபுரி மாவட்டத்தில் வருகிற 28.11.2025-ம் தேதியன்று புதிய மாவட்ட ஆட்சியரகம், அதியன் கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. அவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள், இக்கல்விக்கடனுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் இதர தொழில் சார்ந்த படிப்புகள் படித்து வரும் தருமபுரி மாவட்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் / மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரி கட்டண விவரம் போன்ற ஆவணங்கள் தேவை.
கூடுதல் விவரங்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, தருமபுரி மற்றும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533941 மற்றும் 8925533942 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்,ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்கள்.

