தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு
தருமபுரியில் மாவட்ட அளவிலான ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்றன.
சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்
தருமபுரி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் ஜூனியர் பிரிவில் 60 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணிகளும், சப் ஜூனியர் பிரிவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் என மொத்தம் 105 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 800 ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில துணைத் தலைவரும், தர்மபுரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவருமான பி. பாஸ்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் நடுவர்களை சங்க மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், கன்வினர் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைத்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மேட் பாதுகாப்பு வசதியுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.

மாநிலப் போட்டிக்கு தேர்வு
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த ஜூனியர், சப் ஜூனியர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டிகளில் தர்மபுரி மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் விரைவில் நடைபெறும் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

