கதர் ஆடையாவது வாங்கி ஏழை நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்!
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் கிராமத் தொழில்கள்-காதி கிராஃப்ட், செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளின் சார்பில் தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினையே முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-திங்கள் 2-ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிற்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் கீழே குறிப்பிட்டுள்ளவாறு கதர் விற்பனைக்காக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தள்ளுபடியாககதர் 30 சதவீதமும், பட்டு 30 சதவீதமும், பாலிஸ்டர் 30 சதவீதமும், விற்பனை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவரும் கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும் சிறு தொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும் மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள மாபெரும் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திட கதர் இரகங்கள் அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனவே அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் கதர் துணி இரகங்களை பெருமளவில் வாங்கி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்வதுடன் காந்திஜியின் கனவுகளை நனவாக்கும் பொருட்டு, நாட்டின் நலன் கருதியும், நலிவடைந்த கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவினை வழங்கிடவும் மேலும் வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிற நிலையில் கதர் துறையின் வளர்ச்சிக்கு தேசிய உணர்வுடன் மக்களாகிய நாம் ஆதரவு அளிக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.
இந்நிகழ்ச்சியில் காதி கிராப்ட் மேலாளர் தருமபுரி செல்வம் ஆய்வாளர் ஜெயக்குமார் முன்னாள் மேலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

