பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு
தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலையில் நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் செழிப்பைப் பெருக்கி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். நாவல் மரத்தின் முக்கியத்துவத்தையும், மரங்களின் நன்மைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக இது உள்ளது. நாவல் மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான பொழில் அழிவின்றி செழித்து விளங்குகிறது. நாவல் மரம் உடலுக்கு பல விதமான நன்மைகளை வழங்குகிறது. இதன் பழம், விதை, இலை மற்றும் மரப்பட்டை அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டவை, இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து விட்டமின் B,C போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. வருடத்தில் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் பழங்களில் ஒன்று நாவல் பழம், இந்தப் பழத்தில் நம் உடலுக்கு நன்மை தரும் பல சத்துகள் உள்ளது.

மேலும், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுதல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தை குறைத்தல், ரத்த அழுத்தத்தை குறைத்தல், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் கண் பார்வையை மேம்படுத்துதல் போன்றவை நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் ஆகும்.
மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு ஒரு மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகையில் கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் நட்ட மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், துணை அஞ்சல் கண்காணிப்பாளர் ராகுல் ராவத், தருமபுரி சிபிசி மேற்பார்வையாளர் கீதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

