தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது என்று தர்மபுரியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
தருமபுரி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், மாவட்ட செயலாளருமான டி.கே. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன், மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை,வழிப்பறி உள்பட குற்ற செயல்கள் அதிகரித்து உள்ளது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து இருப்பதே பல்வேறு குற்ற செயல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. போதைப் பொருட்களின் வியாபார சந்தையாக தமிழ்நாடு மாறிவிட்டது. ஆனால் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்காமல் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கிறது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க.அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காமல் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். இதனால் மாம்பழ சாகுபடியை தவிர்த்துவிட்டு வேறு விவசாய பயிர்கள் சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது மிகவும் வருத்தத்தக்க சூழல். ஆனால் மாம்பழ விலை வீழ்ச்சி தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். இது பொறுப்பை தட்டி கழிக்கும் செயல். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை போல் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தற்போது தொடங்கி விட்டோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

