காரிமங்கலத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி.
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, ஏற்பாடு , மேற்பார்வையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் ஒருங்கிணைப்புடன் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு தாலுக்காகளில் பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இரு பிரிவுகளாக காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
காரிமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் துரைவேல் வரவேற்புடன் கூட்டுறவு சார் பதிவாளர்கள் கௌதம் , ரத்தீஸ்வரி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அருண், மொரப்பூர் ஒன்றியம் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில்,செயல் விளக்கத்துடன் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற லேசர்சாப்ட் டெக்னாலஜி பயிற்சி பார்ட்னரின் பயிற்றுனர் தாரிணி பங்கேற்று, பவர் பாயிண்ட் மூலம் பயிற்றுவித்தார்.

பயிற்சியில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் தாங்கள் பணி புரியும் கடைகளில் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம் , சுற்றுப்புற சுத்தம் , பொருள் மேலாண்மை, பொருட்கள் இருப்பு வைத்தல், கையாளுதல், பராமரித்தல் மேலும் உயிரியல் காரணிகள் ஏற்படும் விளைவுகளை தவிர்த்தல் அதாவது எலி, கரப்பான், பல்லி மற்றும் அயல் உயிரிகள் , பூச்சிகள் அண்டாமல் தவிர்த்தல் , வராமல் தடுத்தல் குறித்து தெளிவாக எடுத்து உரைத்தனர். தேவையற்ற பொருட்கள், காலியான சாக்கு பைகள், அட்டைப்பெட்டிகள் உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும், ஸ்டாக் வரும் போதும், விநியோகிக்கும் போதும் கீழே இரையும் அரிசி ,கோதுமை உள்ளிட்ட தானிய பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தேவையான வெளிச்சம் காற்றோட்டம் இருக்கும்படி பணியாற்றும் சூழ்நிலை இருத்தல் வேண்டும். தாங்கள் உடல் நலனையும் கண்காணித்து கொள்ள விழிப்புணர்வு செய்தனர். ஒவ்வொரு விற்பனையாளரும், பணியாளரும் மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் என எடுத்துரைத்தனர்
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் தன் தலைமை உரையில் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் செறி ஊட்டப்பட்ட அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் உப்பு குறித்தும், சேர்க்கப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் குறித்தும், அதன் அவசியம்,நன்மைகள் குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார். மேலும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களான உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி,தயாரிப்பு , முடிவு தேதி,சைவ அசைவ குறியீடு, அலர்ஜி தன்மை, உட்காரணிகள் ஊட்டச்சத்து தகவல்கள்,உணவு பாதுகாப்பு உரிம எண், நுகர்வோர் தொடர்பு எண் தெளிவாக எடுத்துரைத்து, ரேஷன் கடைகளில் பொட்டலம் இடப்பட்ட பாக்கெட் பொருட்களில் காலாவதி அருகில் முடிவடையும் பொருட்களை முதலிலும் விநியோகம் செய்ய அறிவுறுத்தினார். மேலும் உணவுப் பொருட்களில் வீட்டளவில் எளிய முறையில் கலப்படம் கண்டறிதல் செயல் விளக்கம், குறிப்பாக தேயிலை, தேன், சமையல் எண்ணெய் , நெய் மற்றும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடுகளுடன், செறி ஊட்டப்பட்ட அரிசி, சமையல் எண்ணெய், உப்பு உணவு பொருள்கள், பாக்கெட்டுகள் கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளித்தார்.
நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் இரு பிரிவாக பங்கு பெற்றனர். மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி நன்றி உரையாற்றினார்

