காலமுறை ஊதியம் கேட்டு தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 24 மணிநேர உண்ணாவிரதப்போரட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வரின் 2021 சட்டமன்ற தேர்தல்கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குதல், பணிகொடை வழங்குதல், தற்போது சத்துணவு திட்டத்தில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலிப்பணியிடங்களை கொத்தடிமை கூலியான தொகுப்பூதியத்தை ரத்து செய்து அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.10/20/30 ஆண்டு பணிமுடித்தவர்களுக்கு சிறப்பு தேக்கநிலை ஊதியம் அனைத்து மாவட்டத்திலும் உடனடியாக வழங்க வேண்டும் . ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவும், உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வும், கொரோனா காலத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை நீக்கம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தணைத்தலைவர் ஜி. வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம். இராமன் மாவட்ட துணைத்தலைவர்கள் டி. மஞ்சுளா, எம். ஜெயலட்சுமி கே. சங்கீதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பழனிச்சாமி அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. சேகர் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சி. காவேரி, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சக்தி ஆகியோர் வாழ்த்திபேசினர்.

