புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம் கடை இயங்க தடை
உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அவர்கள் காரிமங்கலம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் ‘ பொருட்டு உணவு சார்ந்த தயாரிப்பு நிறுவனங்களில் கள ஆய்வு மற்றும் பேருந்து நிலையம், சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அதன் பேரில், தருமபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,
தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலம் பேருந்து நிலையம், கும்பாரள்ளி, பைபாஸ் ரோடு, அகரம் ரோடு மற்றும் மொரப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர் அப்போது மளிகை கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பெட்டி மற்றும் தேநீர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், குளிர்பானங்களில் காலாவதி தன்மை, தேயிலை தரம் மற்றும் உணவுப் பொருட்கள் தரம், சமையல் எண்ணெய் பயன்பாடு மற்றும் அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரம் வழங்குதல், பொட்டலமிடுதல், காட்சி படுத்தல் ஆகியவற்றை அறவே தவிர்த்தல் குறித்தும், ஒரு முறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மறுபயன்பாட்டுக்கு ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள வழிவகை விழிப்புணர்வு, செய்தனர்.

ஆய்வில் அகரம் பிரிவு ரோடு பைபாஸ் சாலையில் ஒரு பெட்டி டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிறு சிறு பொட்டலம் இடப்பட்டு மறைத்து வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர் ஏற்கெனவே ஒரு முறை புகையிலை விற்று பிடிபட்டதால் ரூ.50000 உடனடி அபராதம் விதித்து கடையை 30 தினங்கள் திறக்க கூடாது என எச்சரிக்கை செய்து நோட்டீஸ் வழங்கி கடை மூடப்பட்டது. பின் மொரப்பூர் சாலையில் கரகப்பட்டியில் அடுத்தடுத்த இரண்டு மளிகை கடை விற்பனையாளர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் 15 நாள் கடைகள் இயங்க தடையும் தலா ரூபாய்.25000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் பேருந்து நிலையத்தில் 2 கடைகள் மொரப்பூர் சாலையில் ஒர் மளிகை கடை என மூன்று கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது. மேற்படி மூன்று கடை உரிமையாளர்களுக்கும் உடனடி அபராதம் தலா ரூபாய்.2000 என 6000 விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கும்பாரள்ளி பகுதியில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்து உரிய உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின் பற்றிட அறிவுரை வழங்கப்பட்டது.

