பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.
பிற மாவட்டங்களில் இருந்து மாவட்ட மாறுதலில் ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பிடிஒ அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட வளர்ச்சித் துறை ஊழியர்களின் பதவி உயர்வுகளை பறிக்கும் வகையில், பிற மாவட்டங்களில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள் என பல ஊழியர்கள் ஒருவழி மாறுதல் பெற்று வருவதை தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களின் கருத்துகளை கருத்தில் கொள்ளாமல், இம்மாதிரியான ஒருவழி மாவட்ட மாறுதல்களுக்கான இசைவு மற்றும் பணியமர்த்தும் ஆணைகளை தொடர்ந்து வெளியிடும் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று ஜன- 6 அன்று தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சி துறை ஊழியர்களும் கருப்பு பட்டையை அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில தணைத்தலைவர்
ஆர். ஆறுமுகம் தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் வினோத் குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தருமபுரி பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார்
அரூரில் மாவட்ட துணைத்தலைவர் பிரின்ஸ், தலைமை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளர் ச. இளங்குமரன் நிர்வாகி மார்க்கரெட் ஆகியோர் பேசினர். மொரப்பூரில் மாவட்ட செயலாளர் தருமன் நல்லம்பள்ளியில் வட்ட தலைவர் மணிவேந்தன், பாப்பிரெட்பட்டியில் வட்ட தலைவர் தீபா, காரிமங்கத்தில் வட்ட தலைவர் லோகநாதன், பாலக்கோட்டில் வட்ட தலைவர் குணசேகரன், பென்னாகரத்தில் வட்ட தலைவர் குமார், ஏரியூரில் வட்ட தலைவர் பாலகிருஷ்ணன், கடத்தூரில் வட்டதலைவர் வீரமணி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

