சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியத் தொல்லியல் அகழாய்வின் மூலம் திராவிடப் பண்பாட்டை உலகறியச் செய்த ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து ‘சிந்துவெளி வரிவடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவாளியல் ஆய்வு” என்ற நூலை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிந்துவெளி நாகரிகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இந்த மூன்று சொற்களும் எல்லோருடைய பள்ளி நாட்களிலும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இந்த நாகரிகத்தில் இடம்பெற்ற திமிலுடைய காளையும், நீண்ட கட்டட அமைப்புகளும், நீர்நிலைகளும் நம்முடைய குழந்தைகால நினைவு குறிப்புகளில் என்றென்றைக்கும் பதிந்திருக்கக் கூடிய வடிவங்களாக அமைந்துள்ளன.
சிந்து சமவெளி நாகரிகம் ஒரு புதினமா அல்லது புதிரா என்ற கேள்வி எப்போதும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும். சிந்துவெளி நாகரிகம் என்பது நன்கு வளர்ந்த ஒரு எழுத்து முறையைக் கொண்டிருக்கக் கூடிய நாகரிகம். ஏனெனில் மிகக் குறுகிய அளவில் முத்திரை வடிவில் எழுதப்பட்டுள்ளதால் இன்றளவும் அதனை படிப்பதில் உள்ள சிரமங்களை ஆய்வாளர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த நாகரிகத்தினுடைய எழுத்து முறையை இன்னும் முழுமையாக படிக்க முடியாத காரணத்தால் இன்றைக்கும் ஒரு புதிராக இருக்கக்கூடிய நிலை இருக்கிறது. இந்த புதிரை விடுவிக்க கூடிய தொடர் முயற்சியில் ஆய்வாளர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.
சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம். எனவே தான் இதனை முற்றிலுமாக அறிந்து கொள்ளும் வகையில் நம்முடைய முதல்வர் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்காக மட்டும் ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி தந்துள்ளார். இந்திய வரலாற்றில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு என்று 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த ஒரே முதலமைச்சர் நம்முடைய முதல்வர்.
நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டுள்ள அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்திருக்கக் கூடிய குறியீடுகள் சிந்துவெளி பண்பாட்டில் இருக்கக்கூடிய எழுத்து முறை குறியீடுகளுக்கு ஒத்திருக்கிறது. மேலும், திராவிடத்திற்கும் சிந்துவெளிக்கும் இருக்கக்கூடிய நாகரிகங்களை நமது தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், குறியீடுகள் மற்றும் இலக்கியம் என்ற மூன்று வகையில் சொல்ல முடியும். இந்த மூன்றிலும் சிந்து வெளியுடன் தொடர்புடைய நாகரிகம் திராவிட நாகரிகம்.

அதே காலகட்டத்தில் கங்கை சமவெளியில் இருக்கக்கூடிய பானை ஓடுகளில் இருக்கக்கூடிய குறியீடுகள் சிந்துவெளி நாகரிகத்துடன் ஒத்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாறு பற்றிய தகவல்களை நாம் அறிவியல் பூர்வமாக தான் அணுக வேண்டும். அந்தவகையில் இந்த ஆய்வுகளும், கருத்தரங்கமும் மிக முக்கியமான ஒரு இடத்தை பெற்று இருக்கிறது. வரலாற்றை அறிவியல்பூர்வமாக அணுகும் வாய்ப்பை இந்த கருத்தரங்கம் நமக்கு வழங்கியிருக்கிறது எனக்கூறினார்.

