புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை
காரிமங்கலம் 4 ரோடு பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காரிமங்கலத்தில் 4 ரோடு பகுதியில் எஸ்.ஐ சுந்தரமூர்த்தி, எஸ்.ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் போலுமலை கோட்டை, கே.ஆர்.பி டேம் ஆகிய பகுதிகளுக்கு சென்று புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காரிமங்கலம் வழியாக செல்வது வழக்கம்.மேலும் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவு நேர வழிபாட்டு தலங்களில் இரவு நேர பூஜைகள், திருப்பலிகள், விடியற்காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கடந்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆங்காங்கே டூவிலர் விபத்துக்கள் ஏற்பட்டன.
இவற்றில் பல விபத்துக்கள் மது குடித்துவிட்டு டூவீலரில் சாகசம் செய்வது மற்றும் அதிக பேருடன் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துக்களே ஆகும்.எனவே இந்த ஆண்டு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று இரவு 8 மணி முதலே வாகன சோதனையை தீவிரப்படுத்தி பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

