பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை , ரூபாய்.50000 அபராதம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, பாலக்கோடு காவல் நிலைய துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் வழிகாட்டுதல்படி இரு துறைகள் இணைந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு காவல் நிலைய முதல் நிலை காவலர் ரவி உள்ளிட்ட குழுவினர் இணைந்து பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள், மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் தொடர் ஆய்வு செய்தனர்.
காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குத்தலள்ளியில் ஊராட்சி அலுவலகம் எதிரில் ஒரு பெட்டி பீடா கடை மற்றும் கம்மாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கனள்ளியில் ஒரு மளிகை கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

மாவட்ட நியமன அலுவலர்க்கு தகவல் அளித்ததன் பேரில், மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை இயங்க 15 தினங்கள் தடை விதித்தும் உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதித்தும் உத்தரவிட்டார். உத்தரவு நகலை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் முதல் நிலைக் காவலர் ரவி இணைந்து மேற்படி கடைகளுக்கு நேரில் சென்று உத்தரவு நகல், மற்றும் சலான் வழங்கி கடையை மூடச் செய்தனர்.
மேலும் பாலக்கோடு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கோகுல் மேற்படி கடை விற்பனையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து தனியாக கோர்ட் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இது போன்ற இணைந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் தொடரும் எனவும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு 9444042322 என்ற புகார் எண்ணில் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.

