தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
தொப்பையாறு ஆற்றில், திறந்து விடபட்ட தண்ணீரால், தரைபாலம் அடித்து செல்லப்பட்ட இடத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் இடத்தில் தரைபாலம் அமைக்ககோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டதொப்பையாறுஆற்றங்கரையோரம் விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில், 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தொப்பையாறு அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், 2,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது, தொப்பையாறு ஆற்றில் ஆர்பரித்து கொண்டு, மேட்டூர் அணைக்கு செல்கிறது.

நேற்று முன்தினம் இரவு ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றின் குறுக்கே விநாயகபுரம் பகுதிக்கு அமைக்கபட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றது. அதேபோல், வெள்ளாரில் இருந்து கஸ்தூரி கோம்பைக்கு செல்லும் வழியில், தரை பாலத்தை தாண்டி அபாயகரமான நிலையில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை, பாப்பம்பட்டி, கோம்பை காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 2,000 -க்கும் மேற்பட்ட மக்கள் அத்தியாவசிய தேவைகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல, 8 கி.மீ., வரை சுற்றிசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொப்பையாறு ஆற்றின் குறுக்கே, விநாயகபுரம், வெள்ளார், பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த பாமக ருமபுரி,சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் மற்றும் தருமபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தபின், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.
கயிறு கட்டி ஆற்றை கடந்த மக்கள்
கம்மம்பட்டி ஊராட்சியில், சேவியூர் கொட்டாய் பகுதியில், 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கம்மம்பட்டி பஞ்., வழியாக சாலை வசதி இல்லாததால், சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கருங்கல்பாளையம் வழியை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், தொப்பையாறு செல்கிறது. இதில் 2,000 கனஅடி தண்ணீர் செல்வதால், அவற்றை கடக்க அபாயகரமான முறையில், ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பெரியவர்கள் மட்டும் கடந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சேவியூர் கொட்டாய் பகுதியில் தரைபாலம் அமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

