மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, வழிகாட்டல் படி உணவு பாதுகாப்பு துறை சார்பாக,மல்லுப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புகையிலை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மாதேசன், உதவி தலைமை ஆசிரியர் மாதேஷ் மற்றும் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை உரையில்: உணவு பொருள் பாக்கெட்கள், தின்பண்ட பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்களான பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் இருத்தல் அவசியம் என விழிப்புணர்வு செய்தார்.
மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், உபயோகிப்பதால் ஏற்படும் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், காசநோய், மாரடைப்பு ,ஆண்மை குறைவு, மூளை செயலிழப்பு, ஆஸ்துமா, இருதய ரத்தக்குழாய் நோய், கால் விரல்களில் ஏற்படும் அழுகிய நிலை நோய்கள் குறித்து எடுத்துரைத்து இதன் காரணமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
மாணவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்த்தல், தடுத்தல் அவசியம் என்றதுடன் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப், குட்கா போன்ற பொருள்கள் கடைகளில் விற்பனை கண்டாலோ, மறைத்து பதுக்கி விற்றாலோ ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு செய்தார்.புகார் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ் அப் புகார் எண்.9444042322 தெரிவித்தார்.

நிகழ்வில் புகையிலைப் பொருட்கள் தடுப்பு சார்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.தமிழ் ஆசிரியர் தேவந்திரன் நன்றி கூறினார்.
பின்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் பள்ளி அருகாமை, பேருந்து நிறுத்தம் மற்றும் ராயக்கோட்டை சாலை மளிகை, பெட்டி,டீ கடைகள் மற்றும் வெள்ளிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகளில் புகையிலை பொருட்கள்,காலாவதி பொருட்கள், குளிர்பானங்கள் ஆய்வு செய்தனர். விதிமுறை மீறிய, காலாவதி பொருட்கள் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கடைகளுக்கு நியமன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ஆயிரம் வீதம் ரூ.2000 உடனடி அபராதம்விதித்தனர்.
