இலக்கினை எய்திய வங்கியாளர், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டு.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுக்கு இரண்டாம் காலாண்டுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து வங்கியாளர்களும் துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டு வங்கிவாரியாக, துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு கடந்த அரையாண்டு காலத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கினை எய்திய சம்பந்தப்பட்ட வங்கியாளர் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், இலக்கை எய்தாத துறைகள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலக்கை எய்த இயலாமை குறித்து தன்னகத்தே ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிந்து இனி வரும் காலங்களில் கொடுக்கப்பட்ட இலக்கை முன்கூட்டியே எய்த ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சென்னையின் உதவிப்பொது மேலாளர் தர்மராஜ், இந்தியன் வங்கி தருமபுரி மண்டலத்தின் மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் ராமஜெயம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

