ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை மாநில அளவில் இன்று (15.11.2024) தொடங்கி வைத்து, “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” மக்கள் பிரதிநிதிகளை அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ”ஊட்டச்சத்தை உறுதி செய்” இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்ததாவது:
“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே மகத்தான உணவாக, திட உணவு வேறு ஏதுமின்றி வழங்கப்படுவதால் தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் சிறந்த முறையில் தாய்ப்பால் புகட்டி ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகளை உருவாக்கிட, பச்சிளம் குழந்தைகள் மீதான தனித்துவமான அக்கறையின் அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் முதற்கட்டமாக 2022 ம் ஆண்டுகொண்டுவரப்பட்டது.“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2022ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 307 கடுமையான மற்றும் 430 மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு மொத்தம் 1044 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தற்போது இரண்டம் கட்டமாக 2024-2025 நிதியாண்டில் தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.52,75,642 (ஒரு பெட்டகம் ரூ.2265) மதிப்பீட்டில் 2329 ஊட்டச்சத்து பெட்டகம் வரப்பெற்றுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட உள்ளது.
ஊட்டச்சத்து பெட்டகத்தில் IFA Syrup – 3 எண்ணிக்கை, பேரிச்சம்பழம் – 1 கி.கி, Protein Pro PL – 1 கி.கி, Cup – 1, துண்டு -1, ஆவின் நெய்-500 கிராம், Albendazole table- 1 ஆகிய பொருட்கள் உள்ளது.தருமபுரி மாவட்டத்தில், இலக்கியம்பட்டி அங்கன்வாடி மையத்தில்உள்ள416 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மாவட்ட அளவிலான துவக்க விழாவில் வழங்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து வட்டார அளவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மக்கள் பிரதிநிதகள் மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதற்கு முன்னதாக அனைத்து குழந்தைகளுக்கும் (0-6 MONTHS) எடை , உயரம் அளவிடப்பட்டு TN ICDS –APP ல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய 15 நாட்களுக்கு பின்னர் ஊட்டச்சத்தின் முன்னேற்ற நிலையினை அறிய மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களால் குழந்தைகளின் எடை, உயரம் அளவிடப்பட்டு TN ICDS –APP ல் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் தான், ஆரோக்கியமான மனநிலை குழந்தைகளுக்கு வரும். ஆரோக்கியமான, செயல்பாடுகள் இருக்கும், உடல் ஆரோக்கியமே குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலைக்கும், ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கும் முக்கியம் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் ஊட்டசத்து பெட்டகத்தில் உள்ள டேட்சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து பொருட்களுடன் காய்கறிகள், பருப்பு மற்றும் கீரை வகைகளை சேர்த்து கொடுக்கலாம்.
இந்த ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு தருவதால், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 மாதம் முதல் 2 வருட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 60 கிராம் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு 30 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.அங்கன்வாடி மையத்தில் முன்பருவகல்வி குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
எனவே பெற்றோர்கள் கர்ப்பிணி பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு முறையாக சென்று எடை, உயரம் கணக்கிடுதல் வேண்டும். ஊட்டச்சத்து உணவினை முறையாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ச.பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யா, கலைவாணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், அங்கன்வாடி குழந்தைகள் கலந்துகொண்டனர்.

