தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடை மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து மற்றும் குழந்தைகளுக்கான நடை” (Walk for Children) என்ற குழந்தைகள் தின உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான நடை “WALK FOR CHILDREN” மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் அதேவழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள்
இந்நிகழ்வுகளின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம், மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவன அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
