தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு பேட்டி
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது என்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி டாக்டர் சைலேந்திரபாபு கூறினார்.
தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி டாக்டர் சைலேந்திரபாபு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ்,, ஐ.பி.எஸ். படிக்க டெல்லி சென்று தமிழக இளைஞர்கள் படித்தனர். தற்போது சென்னையில் இருந்து படிக்கும் வசதி உள்ளது. தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தருமபுரியில் இருந்து படித்து செல்லும் வகையில் தற்போது வசதி வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்,, ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. அரசு பணி என்பது அமைதியை தரக்கூடிய ஒரு சேவைப்பணி. இந்த பணிக்கு வருவதற்கு போட்டி தேர்வு எழுதி வரவேண்டும். மத்திய அரசின் ராணுவப்பணிக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் சேர வேண்டும். காவல்துறையில் காவலராக சேர்வது என்பது கடும் போட்டியாகவே உள்ளது.போட்டித் தேர்வு எழுத 6 மாதம், ஒரு வருடம் படித்த பின்னரே தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. காவல்துறையில் இன்று 65 சதவீத பட்டதாரிகளே காவலராக பணியாற்றுகின்றனர். அதுவும் 35 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் தான் அதிகம். எம்.எஸ்.சி. படித்தவர்கள், பி.எச்.டி. படித்தவர்கள் காவல் துறை பணியில் உள்ளனர்.
ஒரு காலத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். காவலர் பணிக்கு சென்றுவிடலாம். ஆனால் இன்று பட்டதாரிகளே சேர திணறும் நிலையில் உள்ளது. அதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. தற்போது காவல்துறை பணி கல்வி, அறிவியல் அறிவு சார்ந்த வேலையாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடக்கிறது. அதை கண்டுபிடிக்க தேவையான நுண்ணியல் அறிவு தேவை. சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கிறது. எலக்ட்ரானிக் குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை . குறிப்பாக மொபைல் போன்களை எப்படி கையாளுவது என சரியாக தெரியவில்லை. மொபைல் போன் மூலம் மோசடிகள் அதிகம் நடக்கிறது. தொழிலதிபர்கள் கூட கோடிக்கணக்கில் பணம் இழக்கும் சம்பவம் நடக்கிறது. மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இங்கிருந்து அழைத்து சென்று குற்ற செயலியில் ஈடுபட மதுவாங்கி கொடுத்து, அடிமைப்படுத்தி, குற்ற செயலில் ஈடுபட வைக்கின்றனர் .இதுபோன்ற குற்ற செயல்களை காவல்துறையினரால் மட்டுமே விசாரிக்க முடியும்.
கடந்த 33 வருடங்களுக்கு முன்பு நான் இங்கு ஏ எஸ் பி ஆக பணியாற்றினேன். அப்போது வத்தல்மலை பகுதியில் ஏக்கர் கணக்கில் கஞ்சா பயிரிட்டிருந்தனர். அதை கண்டுபிடித்து அளித்த காலம் உண்டு. ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை. படிக்கும் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லுவதில்லை. அவர்கள் போட்டி தேர்வுக்கு கடுமையாக படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் கல்வி, பொருளாதார புரட்சி தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா குறியீட்டிலும் முன்னிலையில் உள்ளது. துப்பாக்கி சூடு போட்டி, புலன் விசாரணை உள்ளிட்ட எல்லாவற்றிலும் முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. அதை தொடர்ந்து கடைபிக்க வேண்டும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் தான் இந்தியா கடுமையான போட்டியில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் சாலைகளில் பைக் ரேசிங் நடத்தி சாகசம் செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையான பைக் ரைசில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.மேலும், இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஒலிம்பிக்கில் போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

