பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அவர்கள் உத்தரவின் பேரில்,உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோட்டில் பேருந்து நிலையம் மற்றும் எதிரில் உள்ள பள்ளி கூடத்தான் தெரு, சானார் தெரு, சாவடி தெரு, தர்மபுரி ரோடு, எம்.ஜி.ரோடு, தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் சாவடி தெரு ஒரு சிறு மளிகை கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள், ஜங் ஃபுட் தின்பண்ட ஐட்டங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி மேற்படி கடை உரிமையாளருக்கு ரூபாய்.2000 உடனடி அபராதம் விதித்து உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அனுமதிக்கு பின் கடை திறக்க உத்தரவிட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி கடை அடைக்கப்பட்டது.
இதே போல் பள்ளிக்கூடத்தான் தெருவில் ஒரு மளிகை கடையில் உரிய விபரங்கள் இல்லாத குளிர்பான பாட்டில்கள் அப்புறப்படுத்தி மேற்படி கடை உரிமையாளர்க்கு ரூபாய்.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மெயின் ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதி உணவகங்களில் ஆய்வில் இரண்டு உணவகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கவர்கள் பறிமுதல் செய்து மேற்படி இரண்டு உணவகங்களுக்கு தலா ரூபாய்.2000 அபராதம் விதிக்கப்பட்டது .
உணவகங்கள் , பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட நெகிழி கவர்களில் சூடான காப்பி, தேநீர், சாம்பார்,ரசம், மற்றும் உணவுப் பொருட்கள் பார்சல் மற்றும் பரிமாறுதல் கூடாது எனவும் சுகாதாரம் பேணவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
தக்காளி மார்க்கெட் பகுதியில் ஒரு பெட்டி டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்ததன் அடிப்படையில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், அவர்கள் பரிந்துரை அடிப்படையில் , புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டி டீக்கடை உரிமையாளர்க்கு உடனடி அபராதம் ரூபாய்.25000 விதிக்கப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து நோட்டீஸ் வழங்கி நியமன அலுவலரால் கடை மூடப்பட்டது. இதேபோல் புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பாலக்கோடு புறவழி சாலை காவப்பட்டி பிரிவு ரோடு பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பெட்டி கடைக்கும் ரூபாய்.25000 அபராதம் விதித்து கடை இயங்க தடை விதிக்கப்பட்டது. பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் மணியம்மை,முதல் நிலை காவலர் சீனிவாசன் உடனிருந்தனர்.

