மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகான ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இஆப. தலைமையில் இன்று (03.10.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு மூன்று நபர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகைகளான கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, திருமண நிதி உதவி, மான்யத்துடன் கூடிய வங்கி கடனுதவி வேண்டியும், 3 சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்ககூடிய மோட்டார் வாகனம், ஊன்றுகோல், கண்கண்ணாடி மற்றும் காதொலிக்கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 183 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், மாற்றுத்திறனாளிகள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்றைய தினம் மனு அளித்தவுடன், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலி, ஊன்றுகோல் மற்றும் காதொலிக்கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டவருவாய்அலுவலர்செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

