3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர் பயன்படுத்தய ஜாடி கண்டுபிடிப்பு
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியிலிருந்து மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள ராசிகுட்டை என்ற சிற்றூரின் அருகிலுள்ள குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு ஒன்று தென்பட்டது. மாரண்டஅள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் வித்யாகரன் அதனை அகற்ற முயன்ற போது அது ஒரு மூன்று கால்கள் உள்ள ஜாடி ஒன்றின் பகுதி என்பதை கண்டு கொண்டார். அதன் ஒரு பகுதி கொஞ்சம் உடைந்திருந்தது. அதுமட்டுமின்றி மேலும் இரண்டு உடைந்த ஜாடிகளும் அங்கே கிடைத்தன.
இந்த மட்பாண்டங்களை மாணவன் விதியாகரன் தன்னுடைய வரலாற்று ஆசிரியர் வீரமணியிடம் காட்டினார். அவர் உடனடியாக தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் தலைவர், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டு கண்டுபிடிப்புக் குறித்து கூறினார்.
தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மருத்துவர் செந்தில், வே ராஜன், ஆகியோர் இன்று ராசிகுட்டைக்குச் சென்று அந்த மட்பாண்டங்களை ஆய்வு செய்தனர். இவற்றை ஆய்வு செய்த சுப்பிரமணியன் இவை 3500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரிவித்தார். ராசிகுட்டை குன்றின் ஓரங்களில் தொல் பழங்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பங்குநத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அகழ்வாய்வுகளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழ்வாய்வில் பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. சென்னா நூர் பெரும் நகரமாக இருந்திருக்கக்கூடும். இவ்வூர் கீழடி காலத்துக்கும் முந்தைய வாழ்விடமாகும். இக் கண்டுபிடிப்புகள் தருமபுரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதைக் காட்டுகின்றன.
