காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து அதிரடி ஆய்வில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம் விதித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை , நடமாட்டத்தை அறவே தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, மற்றும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் , காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தீபன் அவர்கள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய கிரேடு 1 காவலர், சிறப்பு நிலை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி எதிரில் ஒரு தாபா ஹோட்டல், மாட்லாம்பட்டியில் ஒரு மளிகை கடை மற்றும் சட்டக் கல்லூரி எதிரில் அரசு பள்ளி அருகில் ஒரு குடிநீர் கேன்கள் சப்ளை செய்யும் கிடங்கு மேலும் பெரியாம்பட்டியில்அரசுமேல்நிலைப்பள்ளி அருகில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செல்லும் வழியில் ஒரு மளிகை கடை என நான்கு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.
காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 4 கடைகளுக்கும் தலா ரூ 25000 அபராதமும், 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து உத்தரவிட்டார்.
அதனை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் மாயக்கண்ணன் ஆகியோர் இணைந்து மேற்படி நான்கு கடைகளுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி உடன்அபராதம் செலுத்திடவும், 15 தினங்கள் கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடினர்.
