ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில்401 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (02.08.2024) பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமைவகித்தார்.
இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை திறந்துவைத்து, பார்வையிட்டார். மேலும், சுற்றுலாத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, வனத்துறை, சமூக நலத்துறை, சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சியினை பார்வையிட்டார்.

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவானது இன்று 02.08.2024 தொடங்கி 04.08.2024 வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வருவாய்த்துறையின் சார்பில் 166 பயனாளிகளுக்கு ரூ.76.10 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைபட்டா, பல்வேறு உதவித்தொகைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.3.42 இலட்சம் மதிப்பில் வேளாண் நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.56 இலட்சம் மதிப்பிலும், ஊரக நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பிலும் என பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 85 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.04 கோடி மதிப்பில் கடன் உதவிகளும், வனத்துறையின் சாரப்ல் 5 பயனாளிகளுக்கு ரூ.11.31 இலட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 66 பயனாளிகளுக்கு ரூ.51.83 இலட்சம் மதிப்பிலும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.3.30 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளும், சுகாதார துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு குழந்தை ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 401 பயனாளிகளுக்கு 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரத்து 208 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை சுற்றுலாத்துறையின் சார்பில் இன்று 02.08.2024 தொடங்கி வருகின்ற 04.08.2024 வரை 3 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவினை தொடங்கி வைத்து, கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரவும், முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலாப்பயணிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வருகை புரிந்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இம்மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் தருமபுரி மாவட்டம் தொப்பூரிலும், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பாளையம் புதூரிலும் துவக்கி வைத்தார். பாளையம்புதூரில் நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்ட மக்களின் நலனுக்காக வெண்ணாம்பட்டி இரயில்வே மேம்பாலம், குடிநீர் திட்டபணிகள், புதிய சாலைப்பணிகள் உள்ளிட்ட 15 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். இத்திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தருமபுரி, ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகைபுரிந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 24 இலட்சத்து 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகைபுரிந்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 6 கோடியே 48 இலட்சம் நிதி வருவாய் வரப்பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், தனி மனித வருமானம் அதிகரிப்பதோடு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும்.

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 95 சதவிகித பணிகள் முடிவுற்றுள்ளது. இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்த ரூபாய் 2 கோடியே 23 இலட்சம் மதிப்பில் சாகச சுற்றுலாப் பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுற்றுலா திட்டப்பணிகளால் உள்ளூர் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளும், வருமானமும் கிடைக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களுக்கும் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சாகச சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் செய்யும் தொழிலாளர்கள், பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நல்ல முறையில் வரவேற்று, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, ஒரே சீரான கட்டணம் பெற்று சேவை வழங்க வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, சுத்தமான, சுகாதாரமான சுற்றுலாதலமாக பராமரிக்க உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மஞ்சள் பைகள் மற்றும் சணல் பைகளை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா-2024 தொடக்க நாளான இன்று கலை பண்பாட்டுத்துறை துறையின் சார்பில் பல்வேறு வகையான வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பென்னாகரம் வட்டம், பஞ்சப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், 2-ஆவது பகுதி நேர நியாய விலை கடையாக ஒட்டர்தின்னை பகுதி நேர நியாய விலை கடையும், ரெட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் சிறுபிள்ளை பகுதி நேர நியாய விலை கடையும், திண்டல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், பகுதிநேரத்திலிருந்து முழுநேர நியாய விலைக்கடையாக தரம் உயர்த்தப்பட்ட திண்டல் நியாய விலைக்கடையும், மோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், பகுதிநேரத்திலிருந்து முழுநேர நியாய விலைக்கடையாக தரம் உயர்த்தப்பட்ட மேக்னாம்பட்டி நியாய விலைக்கடை என மொத்தம் 4 புதிய முழுநேர, பகுதி நேர நியாய விலை கடைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், பஞ்சப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், சொரகுறுக்கை மலைகிராமத்திற்கான நகரும் நியாய விலை கடை வாகனத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக, தருமபுரி புற நகர் பேருந்து நிலையத்தில் பெங்களூர் – திருப்பதி வழித்தடத்தில் தருமபுரி வழியாக தற்போது இயக்கி வரும் பேருந்துகளுக்கு பதிலாக 10 புதிய பேருந்துகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, இன்பசேகரன், கோட்டாட்சியர் காயத்திரி ,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) குணசேகரன், துணை இயக்குநர் (சுகாதரப்பணிகள்) மரு.ஜெயந்தி, தருமபுரி வட்டாட்சியர் காயத்ரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் க.செல்வம், மாசுகட்டுப்பாடு வாரியம் செயற்பொறியாளர் நித்தியலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இரா.கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, வட்டாட்சியர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், கூத்தப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் கே.பாஸ்கர், உதவி சுற்றுலா அலுவலர் கதிரேசன் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
