”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம்
தருமபுரி டான் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று (01.08.2024) ஆய்வு மேற்கொண்டார்.
இம்முகாமில் வங்கி கணக்கு புத்தகம் இல்லாத 27 மாணவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு துவக்கி, வங்கி கணக்கு புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
பின்னர் அவர்தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 09.08.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் ”தமிழ் புதல்வன்” திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ் புதல்வன்” திட்டம் என்ற மாபெரும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று, உயர்கல்வியில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு, கல்லூரியில் பயின்று வரும் தகுதியான மாணவர்கள் வங்கி கணக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தும் செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தொடர்புடைய கல்லூரிகளில் கடந்த 25.07.2024 முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தகுதியான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முகாமையோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தையோ அணுகலாம் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக அலுவலர் பவித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், கல்லூரி முதல்வர் கே.ஆனந்த், செயலாளர் ராபர்ட் ரமேஷ்பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

