வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கேற்ப வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப்பணிகள் தொடர்பான ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான பணிகளுக்காக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளனர். இக்குழுவில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர். வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.

இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று 25.07.2024 ஹோபர்ட் நகரத்தில் உள்ள டாஸ்மானியா வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் குறித்து வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது மதமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழக விவசாய நிலங்களின் மண் வளத்தை பெருக்கி விவசாயிகள் தரமான உணவு உற்பத்தியை செய்திட தேவையான மண் வள ஆராய்ச்சிகள் தொடர்பான உயர் தொழில்நுட்பங்கள் குறித்து, டாஸ்மானியா வேளாண்மை பல்கலைக்கழக மண்வளத் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் உலக வெப்பமயமாதல், பருவமற்ற காலங்களில் மழை பொழிவு. அதி கனமழை பொழிதல், பயிர்களில் அதிக பூச்சி தாக்குதல், வறட்சி, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பயிர்களை காப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மின்னனு வேளாண்மை. உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் டாஸ்மானியா வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பின்பற்றப்படும் உயர் தொழில் நுட்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், உயர் தொழில்நுட்பங்களை கொண்டு சத்தான பழ வகைகள் மற்றும் காய்கறிகளை விளைவிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கலந்தாய்வில் வேளாண்மை உழவர் நலத்துறைஅமைச்சர்.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர். அபூர்வா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர். பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படும் வேளாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையைப் பெற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
என சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

