தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்த தலைமையில் ஜூலை 22.அன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பென்னாகரம் ஒன்றியம், ஒகேனக்கல்லில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாலை கடைகள், சில்லி சிக்கன் கடைகளில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அலுமினிய பாக்கெட்கள், அனுமதிக்கப்பட்ட உணவு கொள்கலன்கள், நுகர்வோர் பாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமே உணவு பொருட்கள் வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளில் உணவு பொருட்களை வழங்கக்கூடாது. பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் வெளிப்புற கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம் புகையிலை பொருட்களை தடை செய்யப்பட வேண்டும். மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் குறித்து அதிகளவு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், TN Food Safety Consumer App செயலிக்கும் மற்றும் foodsafety.tn.gov.in இணையதளத்திலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.
நவம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.39,55,000/- அபராதம் விதக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) குணசேகரன், நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் தேன்மொழி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர வர்த்தகர் சங்கம், விநியோகிப்பாளர் சங்கத்தினர், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், கந்தசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
