பாலக்கோடு பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற இரண்டு கடைகளுக்கு தலா ரூ 25000,அபராதம் விதிப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, உத்தரவின் பேரில் தருமபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,
தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு, எருதுகூடள்ளி, வெள்ளிச்சந்தை , அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், பெட்டி மற்றும் தேநீர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், செயற்கை நிறம் ஏற்பட்ட உணவுப் பொருட்கள், இறைச்சி, தேயிலை தரம் மற்றும் உணவுப் பொருட்கள் தரம், சமையல் எண்ணெய் பயன்பாடு மற்றும் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்கள் உபயோகம் குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் வெள்ளி சந்தை நான்கு ரோடு பகுதியில் உள்ள இரண்டு மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.25000 அபராதம் விதித்து கடையை 15 தினங்கள் திறக்க கூடாது என எச்சரிக்கை செய்து நோட்டீஸ் வழங்கி கடை மூடி சீலிடப்பட்டது.

பாலக்கோடு, எருதுகூடள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, பேக்கரி, மற்றும் உணவகம் என ஆறு கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்கள் சுமார் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது . பறிமுதல் செய்யப்பட்ட 6 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய்.2000 வீதம் உடனடி அபராதம் ரூபாய்.12000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஒரு மளிகை கடை மற்றும் ஒரு உணவகத்தில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட அப்பளம்,போட்டி பாக்கெட்டுகள் ஐந்து கிலோ மற்றும் செயற்கை நிறமேற்றி பவுடர் பாக்கெட் மற்றும் கன்டைனர் டப்பிகள் பறிமுதல்செய்யப்பட்டுஅப்புறப்படுத்தப்பட்டது. இரண்டு கடை உரிமையாளருக்கும் தலா ரூபாய்.2000 விதிக்கப்பட்டது.
ஆய்வில் பேக்கரி, உணவகம் மற்றும் சிப்ஸ் கடை என மூன்று கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்திய சமையல் எண்ணெயை பறிமுதல் செய்து ,மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய்.ஆயிரம் உடனடி அபராதம் விதித்து ,ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (RUCO- REUSED COOKING OIL) மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய் டீலரிடம் கொடுத்து ரூபாய் 45 முதல் 50 வரை ஒரு லிட்டருக்கு பெற்று கொள்ள வழிவகை உள்ளதாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. அவர்களின் தொடர்பு எண் அளிக்கப்பட்டது.

ஆய்வின் போது செல்லியம்பட்டி துவக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம், எருதுகூடள்ளி துவக்கப்பள்ளி எம்ஜிஆர் சத்துணவு மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையம், அரசு நியாய விலைக் கடைகளில் உணவுப்பொருள் தரம் மற்றும் உணவு தரம், உணவு மாதிரி எடுத்து வைத்தல் குறித்து ஆய்வு செய்து தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டு உணவு பாதுகாப்பு விதிகள் பின்பற்றுதல் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

