“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், பாலக்கோடு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (18.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்த, அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்த “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜூலை மாதத்திற்கான “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பாலக்கோடு வட்டத்தில் இன்று (18.07.2024) காலை 09.00 மணி முதல் நாளை (19.07.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பாடி கிராமத்தில் கடந்த 11.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 4800 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நிர்வாக பணியாணைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வரிடம் பணியாணை பெற்ற பயனாளி திரு.மணி, த/பெ. பச்சியப்பன் என்பவருடைய கலைஞரின் கனவு இல்ல வீட்டின் கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனைதொடர்ந்து, பாலக்கோடு வட்டம், சின்னாறு அணை மழைக்கால உபரிநீரை ஜெர்தலாவ் கால்வாய் நெடுகை 5 கி.மீட்டரிலிருந்து புதிய கால்வாய் அமைத்து எதிரனஅள்ளி ஏரி, மேக்கலாம்பட்டி ஏரி, அழகம்பட்டி ஏரி, கம்மநாயக்கம்பட்டி ஏரி, புலிக்கரை ஏரி, மோதுகுலஅள்ளி ஏரி, சோமனஅள்ளி ஏரி, காட்டேரி, கொல்லஅள்ளி ஏரி, காட்டனஅள்ளி ஏரி, பெத்தலஅள்ளி ஏரி, ஜப்பால்குட்டை, பேகாரஅள்ளி ஏரி, பெத்தன்குட்டை உள்ளிட்ட 14 ஏரிகளுக்கு உபரி நீரை நிரப்பும் வகையில் ரூ.30.00 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் கடந்த 15.07.2024 அன்று இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட பகுதியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் சாலையோர தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமெனவும், பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் விபத்து எச்சரிக்கை பெயர் பலகை அமைக்க வேண்டும் எனவும், வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறையை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, வருகின்ற கல்வியாண்டின் பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பாலக்கோடு வட்டம், தொல்லகாது நீர்வீழ்ச்சிக்கு மேற்கு பகுதியில் நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் தரைமட்ட அளவிலான தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தொல்லகாது நீர்வீழ்ச்சி பகுதியினை சுற்றுலா தளமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், பூமரத்துபள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மதிய உணவின் தரம் குறித்தும், கற்றல் திறன் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார்.
ஆய்வினை தொடர்ந்து, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.69.00 இலட்சம் மதிப்பில் வங்கி இணைப்பு கடன் உதவிகளையும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் ஒரு மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பில் கடன் உதவியும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 6 ஊராட்சிகளுக்கு ரூ.15.50 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.86.50 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, பாலக்கோடு வட்டம், பெரியானூர் கிராமம், பட்டாபி நகர் சமுதாய கூடத்தில் ஊராட்சியின் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். மேலும், மாலையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) தனப்பிரியா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், இணை இயக்குநர் (வேளாண்மை) குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து, வட்டாட்சியர் ரஜினி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் சந்தோஷம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்.

