புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை கைவிடக் கோரி சிபிஎம் பாப்பிரெட்பட்டியில் தெருமுனை கூட்டம்
புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் ஜூலை 15 அன்று பாப்பிரெட்டிப்பட்டி பஸ்நிலையம் அருகில் நடைபெற்றது.
வட்ட செயலாளர் தி.வ. தனுஷன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார் சிறப்புரையாற்றின்ர்.
மாவட்ட குழு உறுப்பினர் சி.வஞ்சி மூத்த தலைவர்கள் தீர்த்தகிரி, சொக்கலிங்கம், சேகர் வட்டக் குழு உறுப்பினர் மனோகரன், கிருஷ்ணவேணி, கண்ணகி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
சென்ற மக்களவையின் இறுதிக் கூட்டத்தில் ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா என்ற பெயரிலும், இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்சிய அதினியம் என்ற பெயரிலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, இந்தி, சமஸ்கிருத மொழியில் சட்டங்களின் பெயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இதுவரையில் இருந்த நடைமுறை. இனி 14 நாட்கள் வரையிலும் இதனைத் தாமதப்படுத்த முடியும். இதுவரை காவல் நிலையத்தில் ஒரு கைதியை 15 நாட்கள் வரை மட்டுமே வைத்து விசாரிக்க முடியும். புதிய சட்டத்தின்படி 15 நாட்களுக்கு மேலாகவும் விசாரிக்கலாம். புதிய சட்டம் கை விலங்கு பூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எவர் ஒருவரையும் தேச துரோகி எனக் குற்றம் சுமத்தி கைது செய்வதற்கு புதிய சட்டம் இடமளிக்கிறது.
புதிய சட்டம் நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மட்டுமில்லாமல், அரசு அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசின் புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

