5 வழித்தடங்களில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம்
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டலத்தின் சார்பில் வழித்தட நீட்டிப்பு மற்றும் தடம் மாறுதல் செய்யப்பட்ட 5 வழித்தடங்களின் மூலம் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் இன்று (08.07.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேருந்து வசதி அளிப்பதற்காக தட நீட்டிப்பு, தடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி-கோம்பை பேருந்து காமராஜ் நகருக்கு காலை, மாலை பள்ளி மாணவர்களின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏமனூர் பள்ளி மாணவர்களுக்கு காலை 07.30 மணிக்கு பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது. எட்டிகுழி கிராமத்திற்குள் காலை மற்றும் மாலை வேலைகளில் பேருந்து இயக்கப்படுகிறது. கலப்பம்பாடி பள்ளி மாணவர்களின் வசதிக்காக மாலை வேலையில் பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சஞ்சீவன் கொட்டாய் கிராமத்திற்கு காலை மற்றும் மாலை பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழித்தடங்களால் காமராஜ் நகர், எட்டிகுழி, கலப்பம்பாடி மற்றும் சஞ்சீவன்கொட்டாய் ஆகிய கிராமங்கள் வழிநீட்டிப்பு மற்றும் மாற்றி இயக்கப்படும் வழித்தடங்களின் மூலம் பேருந்து வசதி பெறுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 3897 பேர் பயன்பெறுவார்கள்.
மேலும், பாளையம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வேண்டுகோளின்படி (Request Stop) பெங்களூர் பேருந்துகள் நீங்கலாக அனைத்து விரைவுப்பேருந்துகள் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் செல்வம், தருமபுரி நகர்மன்றத் தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, துணை மேலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்துக் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

