15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்
கி.சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 631 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருண் (வயது-33) என்பவர் கடந்த 26.11.2021 அன்று எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தமைக்கு, அவரது மனைவி பூவரசி என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-க்கான வங்கிக் காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) தனப்பிரியா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

