தருமபுரி ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாம் 1.36 இலட்சம் குழந்தைகளுக்கு உப்புகரைசல் வழங்கப்படும்
தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 01.07.2024 முதல் 31.08.2024 வரை நடைபெறும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள ORS எனப்படும் இரண்டு உப்பு சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகளை பெற்று, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்க, “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” நமது தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 01-07-2024 முதல் 31-08-2024 வரை இரு மாத காலம் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் அனைத்து ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 1.36 இலட்சம் குழந்தைகளுக்கு ORS எனப்படும் இரண்டு உப்பு சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த இரு மாதங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் வயிற்றுப்போக்கினை தடுக்கும் மற்றும் சிகிச்சை முறை பற்றியும், கைகழுவும் முறை மற்றும் அதன் அவசியத்தைப் பற்றியும், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத்ததைப் பற்றியும் உப்பு சர்க்கரை கரைசல் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

