வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள் பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க விதிமுறைகள் வெளியீடு
வன விலங்குகளை பாதுகாப்பதில், வனத்துறை தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், உயர் மின்னழுத்த மின் வேலிகளால் மின்விபத்து ஏற்பட்டு, வனவிலங்குகள் குறிப்பாக, யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். அதே வேளையில், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணுதலும் முற்றிலும் அவசியமாகிறது. விவசாயிகள் தங்கள் பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை அரசு நிர்ணயித்து 03-07-2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதையும் விவசாய நிலங்களை சுற்றி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை பதிவு செய்வதையும் நடைமுறைப்படுத்தவும், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வழிவகுக்கிறது.
புதியதாக மின்வேலிகள் அமைப்பவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.
காப்புக்காட்டில் அறிவிக்கை செய்யப்பட்ட வனப்பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள விளை நிலங்களுக்கு மின்வேலிகளை அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவுசெய்வதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதியதாக மின்வேலி அமைக்க விரும்புபவர்கள் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி கோரி அரசு அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-1இல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் உரிய வழிமுறைகளின்படி அனுமதி பெற்ற பின் விதிமுறைகளை பின்பற்றி மின்வேலியை அமைத்த பின் அதனைபதிவுசெய்யஅரசுஅறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-3 மற்றும் படிவம்-4இல் உறுதிமொழியுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் மின்வேலி உரிய விதிமுறைகளின்படிஅமைக்கப்பட்டுள்ளதாஎன்பதை உதவி கோட்டப்பொறியாளர் பதவிக்குகுறையாத மின்சார அலுவலருடன் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டு ஆய்வு செய்து உறுதிசெய்த பின்னர் மாவட்ட வன அலுவலரால் அரசு அறிவிக்கையில்வழங்கப்பட்டுள்ள படிவம்-5இல் அனுமதி வழங்கப்படும்.
ஏற்கனவே மின்வேலிகள் அமைத்தவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.
காப்புக்காட்டில் அறிவிக்கை செய்யப்பட்ட வனப்பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஏற்கனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தவர்கள் அரசு அறிவிக்கையில் தெரிவித்துள்ள விவரக்குறிப்புகளின்படி (Specifications) தங்கள் நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொண்ட பின்னர். அறிவிக்கை வெளியான நாளில் இருந்து 60 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் மின்வேலியினை பதிவு செய்து கொள்ள அரசு அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-3இல் உரிய ஆவணங்களுடன் படிவம்-4இல்’ சூரிய மின்வேலி அமைத்த நிறுவனத்தின் உறுதிமொழியுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் மின்வேலி உரிய விதிமுறைகளின்படிஅமைக்கப்பட்டுள்ளதா என்பதை உதவி கோட்டப்பொறியாளர் பதவிக்கு குறையாத மின்சார அலுவலருடன் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டு ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் மாவட்ட வன அலுவலரால் அரசு அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-5இல் அனுமதி வழங்கப்படும்.
அவ்வாறு உரிய வழிமுறைகள் பின்பற்றாமல் இருப்பின் குறைபாடுகளை களைந்து மீண்டும் உட்பிரிவு (1)இன்படி மனுதாரரால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பொது.
மேற்கண்டவாறு பதிவு செய்யப்படும் சான்று 3 வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும்.மேற்கண்டவாறு அனுமதி பெற்று அமைக்கப்பட்ட மின்வேலிகளை சம்மந்தப்பட்ட வனச்சரக அலுவலர் மற்றும் மின்சாரத்துறை போர்மேன் ஆகியோரால் 15 தினங்களுக்கு ஒருமுறை கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
பதிவு சான்றினை புதுப்பித்துக் கொள்ள சான்று காலாவதியாகும் தேதிக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாக மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின்படி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
சூரிய மின்வேலியில், மின் இணைப்பு ஏதும் செலுத்தக்கூடாது. மேலும், மின்சாரம் செல்லும் பகுதியில் இருந்து 6 மீட்டர் இடைவெளி உள்ள பகுதிகளில் மட்டுமே சூரிய மின்வேலி அமைக்க அனுமதி வழங்கப்படும்.
சூரிய மின்வேலி அமைக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.காப்பு நிலப்பகுதிகளில் (Reserve Land) சூரிய மின்வேலி அமைக்க அனுமதி இல்லை.சட்டவிரோதமாக மின் இணைப்புகள் கண்டறியப்படும் பட்சத்தில் வனச்சட்டங்களின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு மின்சார கம்பிகளை சரிபார்த்து பராமரித்து வர வேண்டும். இது குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வனத்துறை மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தேவை இருப்பின் புதியதாக சூரிய மின்வேலி அமைத்துக் கொள்ளவும் / ஏற்கனவே உள்ள சூரிய மின் வேலிகளை வனத்துறையால் பதிவு செய்திடவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு தருமபுரி
மாவட்ட வன அலுவலர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

