பென்னாகரம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார்.
தருமபுரி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நான்காம் நாளாக இன்று (28.06.2024) 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் கி. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 25.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4வது நாளாக இன்று வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பிக்கிலி, பனைகுளம், பாப்பாரப்பட்டி, ஒன்னப்ப கவுண்டஅள்ளி, மாதேஅள்ளி, பள்ளிப்பட்டி, வேலம்பட்டி, ஆண்டாரஅள்ளி, கரியப்பனஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, வட்டுவனஅள்ளி, பவளந்தூர் உள்ளிட்ட வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 242 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுனை பட்டா, பட்டா மாற்றம், வறிய நிலைச்சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து, பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கும் முட்டை, மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மாணவிகளிடம் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளி தலைமையாசிரியர், ஆசியர்களிடம் மாணவிகளின் கற்றல் திறன், கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து, கடந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பாடவாரியாக மாணவிகளின் தேர்ச்சி குறித்து கேட்டறிந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற முறையாக மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும், ஆசிரியர்கள் பாடதிட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒழுக்கம் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும். இளம்வயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு, புதுமைபெண் திட்டம் பற்றியும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கண்ணன், பென்னாகரம் வட்டாட்சியர்.சுகுமார், உதவி இயக்குநர் (நில அளவை) செந்தில்குமார், உதவி இயக்குநர் (வேளாண்மை) சுப்பிரமணி, உதவி இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பி.முனியப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், தலைமையாசிரியை விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்வேலன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
